Pages

Thursday, December 22, 2011

அனைத்து அப்பாகளுக்கும் சமர்ப்பனம்

அனைத்து அப்பாகளுக்கும் சமர்ப்பனம் 

.......அனைத்து அப்பாகளுக்கும் சமர்ப்பனம்........

உழைப்பதற்க்கெனவே
உலகில்
உருவாக்கப்பட்ட
ஒரு உயிர்
அப்பா....

தொகுதிக்கு வரும் எம்.எல்.ஏ வை போலத்தான்
என் அப்பாவின் சிரிப்பு.
எப்போதாவதுதான்
உதடுகள் மேல் உலாவரும்..

அவர் நிம்மதியாய் உறங்கிய தருணங்களும்
நீண்ட நேரம் என்னொடு பேசிய தருணங்களும்
மிக மிக குறைவு.

இமய மலையை விட
இரண்டு மடங்கு சுமை
இதயத்திற்குள் இருந்தும்
என் சிறகுகளை
சீரமைப்பதைப் பற்றியே
சிந்தித்து கொண்டிருப்பார்.


அவர் பட்ட கஷ்டத்தை
பகிர்ந்து கொண்டதில்லை
என் பட்ட படிப்பு முடியும் வரை
பட்டினி போட்டதில்லை..

நான் சிறிது நேரம்
காணமல் போனால்
கண்ணிமைக்கும் நொடிக்குள்
என்னை கண்டுகொள்வார் .

ஒரு...
நிசப்தம்
நிறைந்த நடு நிசிப் பொழுதில்
காணமல் போனார்...
காலமானார்...

எனகிருந்த ஒரே ஒரு
மெலுகுவர்த்தி கரைந்துவிட்டது.
என் இருட்டை வெளுத்த
சூரியன் மறைந்துவிட்டது.

என்னை இழுத்துக்கொண்டு
காலம் வேகமாக ஓடிப்போனது..
எனக்கும் கல்யாணம் ஆனது..

கல்யாண கடனை அடைப்தற்க்கே
பாதி வருஷம் உருண்டோரிச்சு
அதற்குள் கையில் ஒரு குழந்தை
வந்து பிறந்திருச்சு.

என்னை கட்டின பாவத்திற்கு
மனைவிக்கு
மாத்த ஒரு புடவை எடுக்க
மாச சம்பளம் போதவில்ல.

மளிகை பொருளும்
மருந்து செலவும் போக
வாங்குன சம்பளம் மிச்சம்பிடிக்க
வழியுமில்ல.

வசதியா வாழ நினைச்சவனுக்கு
வயித்த கழுவவே
வழியில்லாம போயிருச்சு.

சம்பளம் வாங்குன மறுநாளே
மாச கடைசியாயிருச்சு.

நடுத்தர குடும்பத்தலைவனின்
நரக கசப்பை
நாக்கு ருசிக்க பழகிவிட்டது.

ஆசை மனைவியோட
கொஞ்சி பேசும்
கொஞ்ச நேரமும் விலகிவிட்டது.

என் துயரம் என்னோடு போகட்டும்
என் பிள்ளையாவது
இந்த உலகை ஆளட்டும்.

பத்து வட்டிக்கு கடன் வாங்கி
பள்ளியில என் மகன
சேர்த்த பிறகு
பாவி மனசுக்குள்
முளைத்தது சிறகு.

தட தட வென நாட்கள் நகர்ந்தது
தலை முடி மெல்ல நரைத்தது.

திடிரென ஒருநாள்
நெஞ்சு வலி வர
யாருக்கும் சொல்லாமல்
மருத்துவரை அணுகினேன்.

மாரடைப்பாக இருக்கலாம் என
மருத்துவர் அறிவித்தார்.

அடிகடி அப்பாக்களுக்கு வருகிற
அதே நோய்தான் எனக்கும்.

இருந்தும்
மருத்துவம் தொடர
ஆசையில்லை
மறைக்காமல் சொன்னால்
காசுயில்லை.

கவலையோடு வீட்டுக்கு வரும் வழியில்
கடன் காரன் கழுத்தை நெரிக்கிறான்.
என் நிலையை பார்த்த எல்லோரும்
கைதட்டி சிரிக்கிறான்.

குடும்பம் என்ற ஒன்று இல்லையென்றால்
விசம் குடித்து
என்றோ
என் விதியை முடித்திருப்பேன்.

கண்ணீரை துடைத்துகொண்டு
வீட்டுக்குள் நுழைகிறேன்.

உடைந்த நெஞ்சொடு
ஓய்வு நாற்காலியில்
உட்காருகிறபோது
என் மகன் கேட்கிறான்.

"அப்பா பள்ளியில் சுற்றுலா செல்கிறோம்
பணம் தாருங்கள்"
"இல்லை கண்ணா
அடுத்த முறை போகலாம்" என
அன்பாய் நான் சொல்ல..

மறுபடியும் என் மகன் சொல்கிறான்
"அப்பா உன்னால ஒரு லாபம் ஏது
நீதான் என் வாழ்வின் சாபக்கேடு"


நெஞ்சு வெடித்து
துடிதுடித்து போகிறேன்.
நேர்ந்ததை சொல்ல முடியாமல்
எனக்குள் சாகிறேன்.

என் நினைவுகள் பின் நோக்கி செல்கிறது...

இதே போல்
என் அப்பாவிடம்
நான் நடந்து கொண்டதாய் ஞாபகம்.

இப்படிதானே
என் அப்பா
இலவம் பஞ்சை வெடித்திருப்பார்.
இதயம் நொந்து துடித்திருப்பார்.

ஒரு மகனை பெற்ற எனக்கே
சமாளிப்பது சாகிற வலியை தருகிறதே!

மூன்று பெண்களை கட்டி கொடுத்த
என் அப்பாவுக்கு
எத்தனை சங்கடம் இருந்திருக்கும் ?

என் அப்பாவை போல்
இந்த உலகில் ஒரு ஆள் இல்லை.
இன்று
கண்ணீரால் பாதம் கழுவ
அவர் கால் இல்லை.

அப்பா.....
அப்பா....
அப்பா...

உடைந்த நெஞ்சில்
வடிந்து ஓடும்
கண்ணீரோடு
உங்கள் பாதம் தொட்டு கேட்கிறேன்.
தயவு கூர்ந்து என்னை மன்னியுங்கள்.
உங்களுக்கே
ஆயிரமாயிரம் புண்ணியங்கள்......

----தமிழ்தாசன்----


No comments:

Post a Comment